Wednesday, November 11, 2015

அரவாணியர் – பிரச்சனைகளும் தீர்வுகளும் - முனைவர் ச.கலைவாணி


 aravani
முனைவர் .கலைவாணி
உதவிப்பேராசிரியர்
மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர்
மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி.

ஆண், பெண் என்ற இவ்விரண்டு பால்களுக்கிடையே தங்களை வரையறுத்துக்கொள்ள முடியாமல் சமூகத்தில் வாழ்க்கையிழந்தவர்களாக கருதப்படுபவர்கள் அரவாணியர். இவர்கள் ஒம்பது, பொட்டை,அலி,உஸ்ஸ_ என்று வார்த்தைகளால் தினம் தினம் துகிலுரிக்கப்படுகின்றனர். ஆண்கள் இவர்களை ஆபாசப் பிறவிகளாகவும், பெண்கள் இவர்களை வேண்டா வெறுப்புடனும் பார்க்கின்றனர். அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியடைந்திருக்கும் இக்காலகட்டத்தில் அரவாணியர் பிறப்பும் வாழ்வும், அறிவியல், சமூக உளவியல் ரீதியாக புரிந்து கொள்ளப்படாமலும்,மனிதநேயம் இன்றியும் இருக்கின்றது. இத்தகைய அரவாணியர்களைப் பற்றி ஆய்வதே இக்கட்டுரை.
அரவாணியர் :
அரவாணியர் எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். இவர்கள் திடீரென்று ஒரே நாளில் தோற்றத்தில் மாற்றம் பெறுவது இல்லை. குழந்தைப்பருவத்திலிருந்தே அரவாணியருக்கான வாழ்வு தொடங்குகிறது. ஆணாகப் பிறந்தாலும் பூ வைப்பது, வளையல் போடுவது போன்ற பெண் அடையாளங்களையே விரும்புகின்றனர். அரவாணியரின் இத்தகைய செயல்பாட்டிற்கு இவர்கள் காரணமல்ல உடலில் நடைபெறும் ஹார்மோன் செயல்பாடே காரணம் என்கின்றனர் அறிவியல் அறிஞர்கள். திருமூலரும் இக்கருத்திற்கு ஏற்பாகக் கூறுகிறார்.
ஆண்மிகில் ஆண் ஆகும் பெண்மிகில் பெண்ணாகும்
                   பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்” (திருமந்.)
பெண்ணின் வயிற்றில் உருவான கருவில் ஆண் தன்மையுள்ள குரோமோசோம் மிகுந்தால் ஆண் குழந்தையும், பெண் தன்மையுள்ள குரோமோசோம் மிகுந்தால் பெண் குழந்தையும், குரோமோசோம் எண்ணிக்கை சமமாக இருந்தால் பிறக்கும் குழந்தை அலியாகவும் பிறக்கும் என்கிறார். இவ்வறிவியல் உண்மையைச் சமூகம் உணர்ந்து அரவாணியரை மனிதமாண்போடு நடத்த வேண்டும். அரவாணியர் எல்லா நாட்டிலும் மாநிலத்திலும் காணப்படுகின்றனர். தென்னிந்தியாவில் மட்டும் முப்பதாயிரம் திருநங்கைள் உள்ளனர்.” (ப.182) என்று அ.ஜெயசீலி ‘அரவாணிகள் உரிமை’ என்ற கட்டுரையில் கூறுகிறார். அரவாணியர் என்கிற நிலை உலகில் காலங்காலமாக இருந்து வருகிறது. இதற்கு பழந்தமிழ் இலக்கியங்கள் சான்றாகின்றன.
பழந்தமிழ் இலக்கியங்களில் அரவாணியர் :
பழம்பெரும் இலக்கியங்களில் அரவாணியர் பற்றிய குறிப்புகள், சமூகத்தில் இவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதற்குச் சான்றாகின்றன. இலக்கியங்கள் இவர்களைப் பேடி என்று குறிப்பிடுகின்றன.
பெண்மைவிட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்
ஆண்மைவிட்டு அல்லது அவாவுவ பெண்பால்
                   இருமையும் அஃறிணை அன்னவும் ஆகும்” (நன்.சொல்.264)
என்ற நூற்பாவிற்கு உயர்திணையாகவும் கொள்ளலாம், அஃறிணையாகவும் கொள்ளலாம் என்று பொருள்படுகிறது. உரையாசிரியர்களும் அலி வந்தது, பேடி வந்தது என்றே சான்று தருகின்றனர். இவற்றின் மூலம் பேடி என்பவர்களை அக்காலத்தில் அஃறிணையாகக் கருதியுள்ளனர்.
நாலடியாரும்
செம்மை யொன்று இன்றிச் சிறியார் இனத்தராய்க்
                                                கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ – உம்மை
                                               வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை
                                                அலியாகி ஆடி உண்பர்” (நால. 187 ) என்று கூறுகிறது.
நல்ல குணம் இல்லாதவராய் சிறிய எண்ணமுடையவராய் பிறர்மனை நோக்குவாரே மறுபிறவியில் அலியாகப் பிறந்து பிச்சை எடுத்து உண்பர் என்று கூறுகிறது. இவற்றிலிருந்து அன்றைய காலகட்டத்தில் தவறு செய்தவர்களே அலியாகப் பிறப்பர் என்ற கருத்து நிலவியிருக்கிறது. அவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு பிச்சையெடுத்து உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சீவகசிந்தாமணியில் காந்தருவதத்தையின் தோழியான ‘வீணாபதி’ பேடியாகக் காண்பிக்கப்படுகிறாள். இதனை விளைமதுக் கண்ணி வீணா பதியெனும் பேடி” (சீவ.651) எனும் வரியால் அறியலாம். இவள் தத்தையுடன் போட்டியிட வந்த அரசர்களால் கேலி செய்யப்படுகிறாள்.
நோயே முலைசுமப்பது என்றார்க்கு அருகிருந்தார்
               ஏயே இவளொருத்தி பேடியோ என்றார்” (சீவ.651)
இப்பாடல் வீணாபதியின் அலங்காரத்தையும், அங்கங்களையும் கேலி செய்வதாக அமைந்துள்ளது. அன்றும் இவர்கள் கேலிக்குரியவர்களாகவே கருதப்பட்டிருக்கின்றனர்.
மகாபாரதத்தில் கிருஷ்ணன் பெண்ணாக (அலியாக) மாறியதாக கதைகள் கூறுகின்றன. அரவாணியரும் தங்களை கிருஷ்ணனின் அவதாரம் என்று நினைக்கின்றனர். பாரதப் போரில் களப்பலி கொடுக்க வேண்டியவர்கள் சாமுத்திரிகா இலட்சணம் பொருந்தியவர்களாக இருக்கவேண்டும். இந்த இலட்சணம் பொருந்தியவர்கள் கிருஷ்ணன், அர்ச்சுனன்,அர்ச்சுனன் மகன் அரவான் (பாரதம் இவனை இராவன் என்று குறிப்பிடுகின்றது). எனவே அரவானைக் களப்பலி கொடுக்க எண்ணுகின்றனர். ஆனால் அரவானுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. ஆகையால் கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்துப் பெண்ணாக மாறி அரவான் ஆசையை நிறைவேற்றுகிறார். கிருஷ்ணன் போலவே நாங்களும் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்கள்” (தமிழ் விக்கிப்பீடியா) . இந்நிகழ்வின் நினைவாகவே கூத்தாண்டவர் திருவிழா நடத்தப்படுகின்றது. அதில் தாலியருப்பு நிகழ்;வும் நடைபெறுகிறது என்று கூறுகின்றனர் அரவாணியர். இவர்கள் அரவான் மனைவி ஆகையால் அரவாணியர் எனப்பட்டனர். “பேடி, அலி, உஸ்ஸ, ஒம்போது என வார்த்தைகளால் காயப்படுத்தாமல் ‘அரவாணிஎன்று கௌரவமாக அழைக்க வேண்டும் எனச் சமூகத்திற்கு வேண்டுகோள் வைத்து எங்களுக்குப் பெயர் சு10ட்டியவர் ரவி என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி. 1997ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கூவாகம் திருவிழா மேடையில் ‘அரவானனின் மனைவிகளான இவர்களை இனி அரவாணி என அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்” (ப.252) என்று ஆஷாபாரதி ‘தமிழ் மண்ணே வணக்கம்!’ என்ற நூலில் கூறியுள்ளதை இங்கு நினைவு கூறலாம். மகாபாரதத்தில ‘சிகண்டி’ என்ற பாத்திரம் கூறப்படுகிறது. இப்பாத்திரம் பீஷ்மரைக் கொல்ல பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர். அதே போல அர்ச்சுனன் சாபத்தால் அலியாக இருந்ததாகப் பாரதம் கூறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் அரவாணியர்களை சாபத்திற்குரியவர்களாகவும், நகைப்பிற்குரியவர்களாகவுமே காண்பிக்கின்றன.

நவீன இலக்கியங்களில் அரவாணியர் :
காலப்போக்கில் அரவாணியர்களின் வாழ்வைப் பற்றிய புரிதல்களில் ஓரளவு மாற்றம் அடைய ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக நவீன இலக்கியங்களில் இவர்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். அரவாணியர்களைப் பற்றிய கட்டுரைகள், ஆய்வுகள்,படைப்பிலக்கியங்கள், நேர்காணல்கள் முதலியவை இவர்களின் வாழ்வைப் பற்றிய மர்மங்கள், புனைவுகளை களைந்து சமுதாயத்திற்குப் புரிதல்களை ஏற்படுத்துகின்றது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் அரவாணியரே படைப்பாளர்களாகவும் உள்ளனர் (எ.கா மூன்றாம் பாலின் முகம் – பிரியா பாபு, நான் வித்யா- லிவிங் ஸ்மைல் வித்யா).
தமிழில் அரவாணியர் பற்றிய முதல் நாவல் சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ என்பதாகும். இதைத் தொடர்ந்து சில சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. இரா.நடராசனின் ‘மதி என்னும் ஒரு மனிதனின் மரணம் குறித்து’ கி.இராஜநாராயணனின் ‘கோமதி’ போன்ற சிறுகiதைகளைக் கூறலாம். பால பாரதியின் ‘அவன் – அது – அவள்’ நாவல் அரவாணியரின் வாழ்வியல் சிக்கலை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அரவாணியர்களே தங்கள் வாழ்க்கை, குழந்தைப்பருவம், தொழில், கலாச்சாரம், சடங்குகள் குறித்து ‘உணர்வும் உருவமும்’ என்ற நூலில் எழுதியுள்ளனர். இந்நூலின் முன்னுரையில் மனித உரிமை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுந்தானா? அரவாணிகளுக்கு இல்லையா?” என்று அறைகூவல் விடுக்கிறார்.
நவீன இலக்கியங்கள் இவர்கள் வாழ்வைப் பற்றிய எதிர்மறைச் சிந்தனைகளை நீக்கி சமூகத்தில் புதிய புரிதல்களை ஏற்படுத்துகின்றன.
திரைப்படங்களில் அரவாணியர் :
தமிழ்த் திரைப்படங்கள் இவர்களை அருவருப்பான பாத்திரமாக, விபச்சாரத் தொழிலின் தலைவியாக, நகைச்சுவைக் காட்சியில் கேலிக்குரிய பாத்திரமாகவே சித்திரிக்கின்றன. ‘காஞ்சனா’ திரைப்படத்திற்கு முன்பு வரை வெளிவந்துள்ள பெரும்பாலான திரைப்படங்கள் இவர்களை கேலிக்குரிய பொருளாகவே படைத்துக்காட்டியுள்ளன. இதற்கு எந்த மனிதனும், எந்த அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்தினால் அவைகளைத் துன்புறத்தவில்லை என்று ப்ளுகிராஸிடம் சான்றிதழ் வாங்கித் தரவேண்டும். விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றனவா என்று பார்க்கின்ற சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு அரவாணியர்களை வைத்து எடுக்கப்படும் அருவருப்பான நகைச்சுவைக் காட்சிகள் மட்டும் கண்ணில் படவே படாது. விலங்குகள் மீது காட்டும் அக்கறையைக் கூட அரவாணிகளுக்குக் காட்ட முடியாமல் இறுகிப்போயிருக்கிறது நம் சமூகத்தின் மனம்”(ப.252) என்று கூறுகிறார் ஆஷாபாரதி. இவரது ஆதங்கம் நியாயமானதே!. இவர்களது மனக்குமுறல்களுக்கு விடியலாக ‘காஞ்சனா’ திரைப்படம் அமைந்தது எனலாம். இத்திரைப்படத்திற்குப் பிறகு சமூகத்தின் புரிதல் ஓரளவிற்கு இவர்கள் பக்கம் திரும்பியுள்ளது. அதன் பின்னர் வெளிவந்த திரைப்படங்களும் ஓரிரு காட்சியானாலும் இவர்களை மனிதநேயம் மிக்கவர்களாக காண்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது (எ.கா வானம், உச்சிதனை முகர்ந்தால்).
அரவாணியரின் பிரச்சனைகளும் தீர், வுகளும் :
பிரச்சனைகள் :
  • குடும்பத்தால் வெறுக்கப்படுதல்
  • சமூகத்தால் ஒதுக்கப்படுதல்
  • பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துதல்
இயற்கையின் பிழையால் பிறந்த அரவாணிகள் குடுப்பத்தாலும், சமூகத்தாலும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். குடும்பத்தால் அவமானச் சின்னங்களாகக் குருதப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர். ஆண் குழந்தைகளிடம் இருக்கும் பெண் அடையாளங்களை ஏற்றுக் கொள்ளும் குடும்பம் பதின் பருவத்தில் ஏற்றுக்கொள்வதில்லை. குறைபாட்டோடு பிறக்கும் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள பெற்றோர் இவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. குடும்பத்தின் நிராகரிப்பே அவர்களைத் தவறான செயலுக்கு இட்டுச் செல்கிறது. ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய குழந்தையை வெறுக்கும் பெற்றோர், கேலி செய்யும் நண்பர்கள் என எல்லோரையும் துறந்து பிச்சை எடுத்து, பாலியல் தொழில் செய்து மொத்தமாகத் தொலைந்து போகிறார்கள்” (பக் 251-252) என்கிறார் ஆஷா பாரதி.
சமூகத்தால் கேலிசெய்யப்படுதல், பாலியல் பலாத்காரம் செய்யப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். காவல் துறையும் இவர்களை குற்றவாளிகளாகவேப் பார்க்கின்றது. இதனை பால பாரதியின் ‘அவன்-அது-அவள் என்ற நாவல் குறிப்பிடுகின்றது. இந்நாவல் கற்பனையல்ல! உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தியது என்பதால் உதாரணத்திறகு எடுத்துக்கொள்ளப்பட்டது. நாவலாசிரியர் தமது முன்னுரையில் இந்நூல் முழுவதும் புனைகதை என்று சொல்வதற்கு இல்லை. பல திருநங்கைகளின் வாழ்விலிருந்து எடுக்கப்பட்ட சம்பவங்களின் தொகுப்பே இந்நெடுங்கதை என்று கூறியுள்ளார்.
தீர்வுகள் :
             குடும்பத்தின் ஆதரவு மற்றும் அன்பு
             சமூகத்தின் புரிதல்
             அரசின் சட்டதிட்டங்கள்
பெற்றோர் மற்ற குழந்தைகளைப் போல இவர்களையும் நடத்தவேண்டும். குடும்பத்தினர் அன்பும் ஆதரவும் கொடுத்தால் பிச்சை எடுத்தல் பாலியல் தொழில் செய்தல் போன்ற செயல்கள் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்குத் இவர்கள் தள்ளப்படுவதைத் தடுக்கலாம். சமூகத்தின் புரிதலால் தேவையான கல்வி, தொழில் போன்றவை கிடைக்க வாய்ப்பு ஏற்;படும். அரசின் சட்டங்களால் அரவாணியரைக் கேலி செய்பவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குபவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அரசின் திட்டங்களும்,சலுகைகளும் வழங்க வேண்டும். இச்சலுகைகள் சரியாக அரவாணியரைச் சென்றுசேர வழிவகை செய்யவேண்டும்.
  • ஆணாகப்பிறந்து ஹார்மோன் குறைபாட்டால் பெண்குணங்களோடு இருப்பவர்கள் அரவாணியர்.
  • பழந்தமிழ் இலக்கியங்கள் இவர்களை அலி,பேடி,பேடு போன்ற வார்த்தைகளால் சுட்டுகின்றன.
  • பெரும்பாலும் பழந்தமிழ் இலக்கியங்கள் அரவாணியரை கேலிப் பொருளாகவும், சாபத்திற்குரியவர்களாகவுமே சித்திரிக்கின்றன.
  • நவீன இலக்கியங்கள் மட்டுமே இவர்களைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்துகின்றன.
  • பெரும்பாலான திரைப்படங்கள் இவர்களை அறுவறுப்பான நகைச்சுவைக் காட்சிகளுக்கே பயன்படுத்துகின்றன.
  • குடும்பமும், சமூகமும் அரவாணியரைப் புறக்கணிப்பதால் பாலியல் தொழில், பிச்சையெடுத்தல் போன்ற தொழில்களைச் செய்ய நேரிடுகிறது.
  • குடும்பத்தின் ஆதரவும், சமூகத்தின் ஒத்துழைப்பும், அரசின் சட்டங்களும் இவர்களை சமூகத்தில் மனிதர்களாக வாழ வழி வகுக்கும்.
  • அரவாணியர் சமூகத்திடம் கேட்கும் கேள்வி அரசியல் சாசனத்தில் உள்ள ‘அனைவரும் சமம்’ என்ற வரிகளில் வரும் ‘அனைவரும் சமம்’ என்பதில் அரவாணியரும் உள்ளனரா? என்பதே!
http://puthu.thinnai.com/?p=26924

No comments:

Post a Comment