Wednesday, November 11, 2015

வரி வசூல் செய்ய திருநங்கைகள்:

சர்ச்சையாகும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை

  • 7 பிப்ரவரி 2015
     
     
சென்னை மாநகராட்சியால் திருநங்கைகள் பயன்படுத்தப்பட்ட விதம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
சொத்து வரி பாக்கி வைத்த நிறுவனங்களிடமிருந்து அந்த வரியை வசூலிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முன்பாக திருநங்கைகளை நடனமாட வைத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வரியை வசூல் செய்ததற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 13வது மண்டலமான அடையாறு பகுதியில், பல நிறுவனங்கள் வரி செலுத்தாமல் இருந்த நிலையில், இந்த வரியை வசூலிக்க அந்தப் பகுதியின் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று ஒரு மாறுபட்ட நடவடிக்கையில் இறங்கினர்.
வரியைச் செலுத்தாத நிறுவனங்களின் முன்பாக தாரை தப்பட்டைகளுடன் திருநங்கைகளை நடனமாட வைத்தனர். இதையடுத்து பல நிறுவனங்கள் உடனடியாக தங்கள் வரி பாக்கிகளைச் செலுத்தினர்.
இதன் மூலம் சென்னை மாநகராட்சியின் பதிமூன்றாவது மண்டலத்தில் ஒரே நாளில் ஒன்றரைக்கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிஹார் போன்ற மாநிலங்களிலும் மும்பை போன்ற நகரங்களிலும் திருநங்கைகளைப் பயன்படுத்தி வரி வசூல் செய்வதைப் பார்த்தே தங்களுக்கும் அந்த எண்ணம் வந்ததாகத் தெரிவிக்கிறார் அடையாறு மண்டலத்தின் துணை வருவாய் அதிகாரியான தமிழ்.
சதீஷ் பேண்டு வாத்தியக் குழு என்ற குழுவின் மூலம் இரண்டு திருநங்கைகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் கேட்டதால், திருநங்கைகளை அழைத்துவந்ததாக அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இது மனித மாண்புக்கே எதிரானது என்கிறார் தோழமை அமைப்பைச் சேர்ந்த தேவநேயன். வீட்டைக் காலி செய்வதற்காக வீட்டின் உரிமையாளர் குரங்கு, பாம்பு, பூனை போன்ற விலங்குகளை குடியிருப்பவர் வீட்டிற்குள் விடுவதைப் போல, மாநகராட்சியும் நடந்துகொண்டிருக்கிறது என்கிறார் அவர்.

"புனிதமான செயல்"

திருநங்கைகள் மீது ஏற்கனவே சமூகத்தின் பார்வை தவறாக இருக்கும் நிலையில், அவர்களை இப்படிப் பயன்படுத்துவது சரியா என வருவாய் அதிகாரியிடம் கேட்டபோது, "அவர்கள் வரி வசூல் செய்யும் புனிதமான செயலில்தானே ஈடுபடுத்தப்பட்டனர்" என்று பதிலளித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் மாநகராட்சியின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது திருநங்கைகளை கொச்சைப் படுத்தும் செயல்; இது கடுமையான மனித உரிமை மீறல் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது மிக மோசமான செயல் என்கிறார் திருநங்கையான பிரியா பாபு. சமூகத்தில் திருநங்கைகள் குறித்து இருக்கும் பிம்பத்தை மாநகராட்சி பயன்படுத்திக்கொள்கிறது என்கிறார் அவர்.
இந்த நடவடிக்கையை தொடர்வது குறித்து மாநகராட்சி ஆணையர்தான் முடிவுசெய்ய வேண்டும் என்கிறார்கள் மண்டல அதிகாரிகள்.
திருநங்கைகளை வைத்து வரி பாக்கியை வசூல் செய்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்திருக்கும் நிலையில், இது குறித்து கருத்தைப் பெற சென்னை மாநகராட்சி ஆணையரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உடனடியாகப் பலனளிக்கவில்லை.

http://www.bbc.com/tamil/india/2015/02/150207_transgender

No comments:

Post a Comment