Wednesday, November 11, 2015

விஜய் டிவி நீயா நானா குழுவினர் மீது திருநங்கைகள் குமுறல்











தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராகவும், சிறப்பு அழைப்பாளராகவும் இருக்கும் எழுத்தாளர் பிரியா பாபு அண்மையில் விஜய் டிவியின் நீயா, நானா நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
”அன்புத்தோழமைகளுக்கு…

சில தினங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியின் ’நீயா? நானா?’ நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் நீண்ட வற்புறுத்தலாலும், எனது தோழிகள் என் வருகையை விரும்பியதாலும் சென்று கலந்து கொண்டேன். ஆனால் தற்போது அந்த நிகழ்வில் கலந்துக்கொண்டதை குறித்து வெட்கப்படுகிறேன். என் வாழ்வில் கலந்துகொண்ட மோசமான நிகழ்வாக இதைக் கருதுகிறேன் இந்நிகழ்வினாலும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாலும் காயம்பட்ட, மனஉளைச்சலுக்கு ஆளான என் திருநங்கை தோழிகள் மற்றும் எங்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுகின்ற சில தோழமைகளிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன்.
பல திருநங்கைகளை மாவட்டத்தின் பலப்பகுதிகளிலிருந்தும் நிகழ்வில் பங்கேற்க வரச்செய்துவிட்டு துளி கூட மனசாட்சி இல்லாமல் திருப்பி அனுப்பியதையும், ஒரு திருநங்கைத் தோழியை நிகழ்வில் அமரவைத்துவிட்டு கீழே இறக்கியதையும், நடனப் பள்ளி நடத்தும் ஒரு தோழியின் பள்ளியிலிருந்து சில சிறுமிகளை வரச்செய்துவிட்டு, நிகழ்வில் அவர்களை பங்கேற்க விடாமல் செய்தது என திரைமறைவில் நிகழ்ந்த பல சம்பவங்களைக் கேட்டு அதிர்ந்து போனேன்.
ஒரு தோழி, தான் அவமானப்படுத்தப்பட்ட விதத்தை நேற்று தொலைபேசியில் என்னிடம் பேசுகையில், தன் வாழ்க்கையில் இதுவரை இப்படி அவமானப்படுத்தப்படுத்தப்பட்டதில்லை என கதறி அழுதார்.
அந்த திருநங்கை தோழி, அந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய  குடும்பம் தன்னை ஏற்றுக்கொண்ட கதையை சமூகத்தின் முன்னால் விளக்க, தன் சகோதரியையும் அழைத்து வந்திருந்தார். இன்னோரு தோழிக்கோ, அழுகையை அடக்கிக்கொண்டு பேச முடியாமல் வார்த்தைகள் சிக்கித் தவித்தன.
நிகழ்வில் கலந்துக்கொண்ட சில திருநங்கைகளும் தங்களின் வாழ்வையோ ,வலிகளையோ இந்த நிகழ்ச்சி சரியாக பதிவு செய்யவில்லை என குமுறினர்.
நானும் அதைத்தான் நினைக்கிறேன். இப்படித் தெரிந்திருந்தால் கண்டிப்பாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருக்கவே மாட்டேன்.
ஏற்கனவே ஒடுக்கப்பட்ட,விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட, திருநங்கைகளின் கண்ணீரில் காசு பண்ண நினைக்கும், இதுபோன்ற நிகழ்ச்சி ஒருங்கணைப்பாளர்களே. வேண்டாம் எங்கள் உணர்வுகளோடு ஒரு விளையாட்டு!”



மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜி என்ற திருநங்கையின் குமுறல் :
”விஜய் டிவியா ? இல்லை வியாபார டிவியா?
திருநங்கைகளின் கண்ணீரிலா காசு பண்ணனும்?
திருநங்கைகள் குறித்து நீயா? நானா நிகழ்வின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள நானும், என் சகோதரியுடன் சென்றேன்.நான் குடும்பம் ஏற்றுக்கொண்டு வாழும் திருநங்கை.உண்மையிலே அதிர்ந்து போனேன். என்னை நிகழ்வில் உட்கார வைத்துவிட்டு காரணம் சொல்லாமல் இறக்கிவிட்டார்கள்.



அத்தோடு நிகழ்வில் ஒவ்வோரு திருநங்கையும் தன் வலி மிகுந்த வாழ்வை பதிவு செய்கையில் நிகழ்ச்சிக்கு பின் அரங்கில் நிகழ்ச்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் அமர்ந்துக்கொண்டு எங்கள் உணர்வுகளை சொல்லமுடியாத வார்த்தைகளால் கேலிகிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். எங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் முக்கிய ஒரு பெண் பிரபலத்தை எங்கள் சார்பாக பேச வரச்சொல்லிவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். குறைந்த பட்ச ’ஸாரி’ கூட கேட்க அவர்கள் மீடியா பலமும்,ஆள் பலமும் தடுக்கிறதோ?.
எத்தனை திருநங்கைகளை மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரச்செய்துவிட்டு, போக்குவரத்து செலவுக்குக் கூட காசு கொடுக்காத அவலம்?
எங்கள் துயரங்களை உலகுக்குச் சொல்லுகிறோம் என்ற விளம்பரத்துடன் எடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் இத்தகைய செயல்பாடுகள் இவர்கள் உண்மையில் படித்தவர்கள் தானா? பண்பாளர்கள் தான? என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியது.
எங்களை கொச்சை படுத்தியது போலவே தான் ஏனைய  எல்லா நிகழ்வுகளிலும் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் நடந்திருப்பார்கள் போல?
இந்த நிகழ்ச்சிக்கு ஒரு தொகுப்பாளர் ,ஒருங்கிணைப்பாளர் தேவையா? வெட்கக்கேடு.
நிகழ்வில் கலந்துக்கொண்ட பல திருநங்கைகள் சொல்லமுடியாத காயங்களுடன் தான் உள்ளார்கள்.
எங்கள் குமுறல்கள் கண்டிப்பாக உங்களை தண்டிக்கும்.”
இவை குறித்து நீயா நானா நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆண்டனியிடம் தொடர்பு கொண்டு அவரது கருத்தைக் கேட்டோம்.



“பொய்யான அவதூறுகளுக்கு பதில் தர விரும்பவில்லை” என்று முடித்துக் கொண்டார்.

http://www.seythigal.com/?p=3877



No comments:

Post a Comment